நாகப்பட்டினம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட 10 முதல் 50 வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் இருந்து வந்தது.
இந்நிலையில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த 45 டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களிடம் இருந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாத மாமுல் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஓய்வூதிய சங்கக் கட்டடத்தில் மேலாளர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்பார்வையாளர்கள் லஞ்ச பணத்தை கொடுக்க வந்துள்ளனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு அலுவலர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அதிரடியாக உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான அலுவலர்கள், மேலாளர் அம்பிகாபதியிடம் இருந்து கணக்கில் வராத மூன்று லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, மேலாளர், டாஸ்மாக் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.