வேலூர்: பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட காவலரை, பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய இளைஞர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் போதையில் சாலையில் செல்பவர்களிடமும், கடைக்காரர்களிடம் தகராறு செய்வதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
![police attacked by drunken men in vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-02a-cop-attacked-visual-7209364_02102020165239_0210f_1601637759_694.jpg)
இந்தத் தகவலின் பேரில் அங்குச் சென்ற காவலர் அருண் கண்மணி, போதையில் ரகளை செய்து கொண்டிருந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போது அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், காவலரை பின்தொடர்ந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அருண் கண்மணியின் காது, தாடை, கழுத்து பகுதிகளில் பலமாக அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த வெட்டு காயங்களுடன் காவலர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் காவல் துறையினர், காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இச்சூழலில் இன்று (அக். 2) காலை காவலர்கள் கையில் இளைஞர் சிக்கினார்.
விசாரணையில் இவரது பெயர் நவீன் என்பதும், இவர் தாலையாத்தம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. விசாரணை முடிந்த பிறகு, இளைஞர் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.