ETV Bharat / jagte-raho

காணாமல் போன இளைஞர் தனியார் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு!

author img

By

Published : Jan 17, 2021, 9:37 PM IST

வாணியம்பாடி அருகே நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போன டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்ததார இளைஞர் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன இளைஞர்   சடலமாக மீட்பு
காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை- நிம்மியம்பட்டு செல்லும் சாலையிலுள்ள மராட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாண்டுராவ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான காவல்துறையினர், கிணற்றிலிருந்து சாக்கு மூட்டை ஒன்றை மீட்டு அவிழ்த்தபோது அதற்குள் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் வலது கையில் பாப்பு என பச்சைக் குத்தப்பட்ட படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைப் பார்த்து சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவர் ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் நாகராஜ் (30) என்பது தெரியவந்தது. இவர், கோவையில் டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்ததும், தனது சொந்த ஊரிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துச் சென்று கோவையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்தது.

போகிப் பண்டிகைக்கு முந்தைய தினம் தன்னிடம் பணிபுரிந்து வந்த பணியாளர்களுக்கு சம்பளம், பொங்கல் ஊக்கத் தொகை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்து, தானும் ஊருக்கு திரும்பியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன் முடி வெட்டிவிட்டு வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் நாகராஜ் கிடைக்காததால், இன்று (ஜன.17) காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாகராஜின் உடலை மீட்ட ஆலங்காயம் காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர் பாரி தலைமையிலான அலுவலர்கள் தடயங்கள் சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞர் தொழில் போட்டியின் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் உள்பட இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.