ஆவடி பகுதியான புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர், திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு, வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்து தங்கச்சங்கிலி பறிப்பது தொடர்கதையாக நடந்து வந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆவடி, திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் புகார் செய்தனர்.
இதனையடுத்து ஆவடி காவல் துறையினர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இதில் செயின் பறிப்பு நடந்த இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மேற்கண்ட நான்கு இடங்களிலும் ஒரே இளைஞர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வழிப்பறி செய்த இளைஞர் ஆவடி, நந்தவன மேட்டூர் வஉசி தெருவைச் சேர்ந்த முன்னாள் காவலர் சதீஷ் (32) என்பவர் என தெரியவந்தது. இதனையடுத்து, இன்று சதீஷ் பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மேற்கண்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டததை சதீஷ் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், சதீஷ் 2013ஆம் ஆண்டு இளைஞர் காவல் படையில் சேர்ந்து உள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடியில் உள்ள 3ஆம் அணியில் பணியில் இருந்துள்ளார்.
அப்போது அவர், திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் சக காவலர் கோவிந்தராஜ் என்பவரிடம் கடனுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி கோமளா (21) பணம் கொடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து சதீஷ் வீட்டுக்கு சென்று கோமளாவிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர் கோமளாவை கத்தியால் சரமாரி குத்தி கொல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து சதீஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர், காவல் துறை பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சதீஷை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை