ETV Bharat / international

ஆப்கன் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 18 பேர் உயிரிழப்பு, 21 பேர் படுகாயம்

author img

By

Published : Sep 2, 2022, 5:52 PM IST

Updated : Sep 2, 2022, 6:00 PM IST

ஆப்கன் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு
ஆப்கன் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் 18 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபுல்: ஆப்கன் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஹெராத் நகரில் உள்ள குசர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று (செப். 2) மதியம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வாரம், இஸ்லாமியர்கள் அங்கு சிறப்புத்தொழுகை மேற்கொண்டு வந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஹெராத் நகரின் அவசர உதவி மையத்தைச் சேர்ந்த அலுவலர், முகமது தாவூத் முகமதி தெரிவித்துள்ளார். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தாலிபன் அலுவலர்கள் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழப்புகள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்னர், ஆப்கனில் தாலிபன்களை குறிவைத்து பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று வந்தன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற பள்ளிவாசலில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் தொழுகை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் ஆதிக்கம் வாய்ந்தவர்களாக சன்னி இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். தாலிபன்களும், ஐஎஸ் அமைப்பினரும் சன்னி இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் அமைப்பு, பல்வேறு பள்ளிவாசல்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு சம்பவங்களையும், தற்கொலைப்படை தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளன.

இதையும் படிங்க: இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

Last Updated :Sep 2, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.