ETV Bharat / international

அமைதியான அதிகார மாற்றத்திற்காக காத்திருக்கிறோம் - தலிபான் செய்தித்தொடர்பாளர்

author img

By

Published : Aug 15, 2021, 6:53 PM IST

தலிபான்கள் காபூலைச் சுற்றிவளைத்துள்ள நிலையில், காபூலை தாக்குதல் நடத்தி தாங்கள் கைப்பற்றப்போவதில்லை எனவும், அமைதியான அதிகார மாற்றத்திற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுகைல் சாகீன் தெரிவித்துள்ளார்.

Taliban enter Kabul, await ‘peaceful transfer’ of power
அமைதியான ஆட்சி பரிமாற்றத்திற்காக காத்திருக்கிறோம்- தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில், அரசு கட்டுப்பாட்டு பகுதிகளை வேகமாக கைப்பற்றிவரும் தலிபான்கள், நேற்று (ஆகஸ்ட் 14) காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றி தங்களது படைகளை நிலை நிறுத்தினர். மேலும், தாக்குதல் நடத்தி காபூலை தாங்கள் கைப்பற்றப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச்சூழ்நிலையில், தூதர்களை பாதுகாப்பாக வெளியேற்ற, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் இன்று அமெரிக்க தூதரகத்திற்கு வந்திறங்கின.

தலிபான்களின் வேகம்

நாடு முழுவதும் வெடித்த வன்முறையில், தலிபான்கள் வேகமாக அரசு கட்டுப்பாட்டு பகுதிகளைக் கைப்பற்றி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க உளவுப்பிரிவின் ஆய்வின்படி தலிபான்கள் காபூலை கைப்பற்ற இன்னும் 30 நாள்கள் ஆகும் என மதிப்பீடு செய்திருந்தது. இந்த மதிப்பீட்டைவிட வேகமாக தலிபான்கள் முன்னேறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

20ஆண்டுகளாக ஆப்கான் அரசுக்கு ராணுவ உதவி, பயிற்சிகளை அமெரிக்கா வழங்கியிருந்தபோதும், வேகமாக ஆப்கான் அரசு வீழ்ச்சியடையக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

முக்கிய ஆவணங்களை எரித்த அமெரிக்கா

அமெரிக்கத் தூதரகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் வந்திறங்கியது. இது தொடர்பாக அமெரிக்கா எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஹெலிகாப்டர் வந்திறங்கிய சில நிமிடங்களில், தூதரகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும், அதன்விளைவாக தூதரகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், பல்வேறு தூதரகங்களிலும் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான்களின் அறிவிப்பு

தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுகைல் சாகீன் ஊடகம் ஒன்றிடம் பேசியபோது, அமைதியான அதிகார மாற்றத்திற்காக தாங்கள் காத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால், ஆப்கான் அரசுக்கும் தலிபான்களும் இடையில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததா என்பது குறித்து எந்தவித விவரங்களையும் அவர் கூறவில்லை. மேலும், ஆப்கான் அரசு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தங்களிடம் சரணடையவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆட்சியை ஒப்படைத்ததாகப் பரவும் தகவல்

பெயர் குறிப்பிட விரும்பாமல் ஊடகம் ஒன்றில் பேசிய ஆப்கான் உயர் அலுவலர், ஆட்சியை ஒப்படைப்பது குறித்து தலிபான்களுடன் கூட்டம் நடந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அஷ்ரப் கானி அதிகாரத்தை தலிபான்கள் வசம் வழங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆட்சி தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆட்சி தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டால், இடைக்காலத் தலைவராக அலி அகமத் ஜலாலி இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: காபூலைச் சுற்றி வளைத்த தலிபான்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.