ETV Bharat / entertainment

மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் - நடிகர் 'ஜெயம்' ரவி

author img

By

Published : Sep 7, 2022, 3:18 PM IST

மணி சார் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்; இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம் என நடிகர் 'ஜெயம்' ரவி கூறினார்

மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம்
மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம்

'பொன்னியின் செல்வன்' இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, 'எல்லோரும் நன்றாகப் பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.

இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்குத் தெரியாது. மணிரத்னம் சார் கூப்பிட்டார். சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்துவிட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா, அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை.

பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது.

மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளாகிறது. நீண்ட ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்தப் படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது, நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் உருவானது. அப்படியே வீட்டுக்குச் சென்றேன்.

மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம்
குந்தவையும் நந்தினியும்

எப்போது பார்த்தாலும் அதே மூடில் இருந்தேன். இதனால் வீட்டில் திட்டு வாங்கினேன். வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக்கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.

கார்த்தி இந்தப்படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்கப் பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும். மனதார வேண்டிக்கொள்கிறேன். விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி' என்றார்.

பிறகு பேசிய நடிகை திரிஷா, 'இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார், கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் 'வாவ்' என்றே சொல்ல வைக்கிறது.

2k கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்தப் படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது. இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி' என்றார்.

இதையும் படிங்க: இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படப்பாடல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.