ETV Bharat / entertainment

முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா மாமன்னன்? - உண்மை நிலவரம் என்ன?

author img

By

Published : Jun 30, 2023, 8:08 AM IST

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையா என கேள்வி எழுந்துள்ளதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நேற்று (ஜூன்29) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக மாமன்னன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சேலத்தில் நடக்கும் ஒரு அரசியல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காசிபுரம் தனித் தொகுதியில் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் ஃபகத் ஃபாசிலுக்கும், அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு மற்றும் அவரது மகனான உதயநிதிக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.

இதில் வடிவேலுவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருப்பதாகவும், பகத் பாசில், உதயநிதி, கீர்த்தி ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதிலும், ஆதிக்க சாதியினரின் அடக்கி ஆளும் குணத்தை கேள்வி கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் கதைதான் இது என்கின்றனர் சிலர். தனபால் அதிமுக ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர். பட்டியலின சபாநாயகர் இவர். இவரது கதாபாத்திரத்தில்தான் வடிவேலு நடித்துள்ளார்.‌ ஆனால், கதை வேறு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரு முறை சட்டப்பேரவை சபாநாயகராக தனபால் இருந்துள்ளார். 2001இல் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சேலம் பகுதியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சங்ககிரி தொகுதியில் தனபால் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

அப்போது தேர்தல் பணியாற்றும் கட்சியினருக்கு சாப்பாடு கூட தனபால் வாங்கித் தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிய வர, தனபால் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். இதனையடுத்து, கட்சியினருக்கு சாப்பாடு கூட வாங்கித் தருவதில்லை என தனபாலிடம் ஜெயலலிதா கேட்டபோது, "நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் அதிமுகவினர் யாரும் வாங்க மாட்டார்கள். வாங்கிக் கொடுத்த சாப்பாட்டையும் தொடக்கூட இல்லை" என கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தனபாலை உணவுத்துறை அமைச்சர் ஆக்கினார். "நீங்கள் வாங்கி கொடுக்கும் சாப்பாட்டை தொடக் கூட மாட்டார்கள் என கூறினீர்கள். ஆனால், இன்று நீங்கள்தான் தமிழ்நாட்டுக்கு உணவு தரப் போகிறீர்கள்" என ஜெயலலிதா கூறியதாக தனபால் ஒரு இடத்தில் பதிவு செய்திருப்பார்.

பின்னர் இவரை‌ துணை சபாநாயகராகவும், அதற்கு பின்னர் சபாநாயகராகவும் ஜெயலலிதா நியமித்தார். இவரது வாழ்வின் இந்த பகுதிகளை கதையாக்கி அதற்கு தனது பாணியில் திரைக்கதை அமைத்து மாமன்னனை இயக்கியுள்ளார், மாரி செல்வராஜ். தனபால் அரசியல் பயணத்தில் நடந்தது போன்ற சம்பவங்கள் மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், உண்மையான மாமன்னன் தனபால் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரே கட்சியில் இருந்தாலும் ஆதிக்க மனநிலை எப்படி ஒரு மனிதனை நடத்துகிறது, அதன் வலி எப்படி இருக்கும் என்பதை குறியீடுகள் மூலம் உணர்த்தியுள்ளார் மாரி செல்வராஜ்.

வழக்கமாக இவரது படங்களில் வருவதுபோல் இதிலும் நாய், குதிரை, பன்றி போன்ற விலங்குகள் குறியீடுகளாக வருகின்றன. தேவர்‌ மகன் படத்தின் இசக்கி கதாபாத்திரம்தான் வடிவேலு என்று முன்னர் பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். படத்தை பார்க்கும்போது பட்டியல் இன மக்கள் எப்போதுமே ஆதிக்க வர்க்கத்தினருக்கு கை கட்டி நிற்க மாட்டார்கள்.

அவர்களும் முன்னேறி தலைமை பதவிக்கு வருவார்கள் என்பதைத்தான் மாரி செல்வராஜ் சொல்ல முயன்றுள்ளார் என்று புரிகிறது. இசக்கி எம்எல்ஏ ஆகி அதைவிட உயர்ந்த பதவிக்குச் சென்றால் என்ன ஆகும் என்பதே மாரி செல்வராஜ் பார்வையில், மாமன்னன். இதில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

மாமன்னன் படத்தின் கதை பற்றி முன்னாள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனிடம் கேட்டபோது, "இந்தப் படத்தில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதால் நான் கருத்து கூறி, படத்திற்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. ஆனால், சமத்துவம், சமூகநீதி பேசுகின்ற திமுக, ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை சபாநாயகர் பொறுப்பிற்கு கொண்டு வந்திருப்பார்களா?

வெறும் வாய் அளவுக்கு மட்டுமே சமூக நீதி, சமத்துவம் பேசும் கட்சி திமுக. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது சபாநாயகர் தனபாலை திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக தாக்கினர். சபாநாயகர் தாக்கிய விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக சட்டப்பேரவையை விட்டு வெளியே வந்த ஸ்டாலின், சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். படத்தில் பேசும் சமூக நீதியை உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கடைபிடிப்பதில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: வெளியான 'மாமன்னன்' படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பு; நெல்லையில் 20 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.