ETV Bharat / entertainment

Demonte Colony 2: அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு - ரிலீஸ் எப்போது?

author img

By

Published : Jun 29, 2023, 6:54 AM IST

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து 2015இல் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. திகில் படமாக வெளியான டிமான்ட்டி காலனி மிகப் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. வித்தியாசமான திகில் படமாக உருவானதால் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து மீண்டும் அருள்நிதியை‌ வைத்து டிமான்ட்டி காலனி படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் அருள்நிதியுடன் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு பணிகளை டி.குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டுள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க: வாங்கி கட்டிய பின்னர் திருந்திய லியோ படக்குழு.. 'நா ரெடி' பாட்டில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இருப்பதால் தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கான அறிமுக போஸ்டர் கியூ ஆர் கோடு முறையில் வெளியிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது என்பதும், விரைவில் டிமான்ட்டி காலனி 2 படத்தின் புதிய அப்டேட்டுகளும் வித்தியாசமான முறையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அருள்நிதிக்கு த்ரில்லர் நாயகன் என பெயர் பெற்றுக் கொடுத்தது இப்படம். இதனைத் தொடர்ந்துதான் அருள்நிதி த்ரில்லர் படங்களில் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தினார். டிமான்ட்டி காலனி படத்தை தொடர்ந்து தேஜாவு, டைரி என பல த்ரில்லர் படங்களில் அருள்நிதி நடித்தார். அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் அருள்நிதி நடித்து கடந்த மே 26ஆம் தேதி வெளியான ’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படிங்க: திரையரங்குகளில் தெறிப்புத் தருணங்கள் இருக்கும் - மாமன்னன் பார்த்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.