சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகும் விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். அது விக்ரம் படத்தின் 3ஆம் பாகத்தின் தொடக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை உருவாக்கினார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் தான் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும் என்றும் கூறினார்.
![விக்ரம் 3ஆம் பாகத்தில் சூர்யா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15336310_surya.png)
இதற்கு முன்னதாக வெளியான விக்ரம் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, பழைய விக்ரம் படத்தில் உள்ள ஒரு சம்பவம் இந்த புதிய விக்ரம் படத்திலும் இருக்கும். அது ஒன்று மட்டுமே இந்தப் படத்தில் உள்ள தொடர்பு என்று கமல் கூறியுள்ளார்.
'பத்தல பத்தல' பாடலின் அரசியல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது பற்றிய கேள்விக்கு, "நான் எப்போதும் சினிமாவையும், அரசியலையும் பிரித்ததில்லை. என்னுடைய பல படங்களிலும் வெளிப்படையாகவே அரசியல் பேசி இருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: Perarivalan release: ’வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்குணமும்’ - கமல்ஹாசன்