ETV Bharat / entertainment

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்!

author img

By

Published : Mar 3, 2023, 8:25 PM IST

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக, சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர், அஹிம்சா எண்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின்‌ டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் மோகன்ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

'லாக்கப்' எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார்.

விழாவில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா, 'என்னுடைய உதவி இயக்குநராகப் பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. 'வேலைக்காரன்' படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் இயக்கிய 'லாக்கப்' திரைப்படம் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு.

இந்த திரைப்படம் 'லாக்கப்'பைவிட நன்றாக வந்திருக்கிறது என சார்லஸ் என்னிடம் தெரிவித்திருக்கிறார். 'லாக்கப்' திரைப்படத்தை விட, இந்த 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தை கமர்சியலாக இயக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும், முன்னோட்டத்தையும் பார்த்தேன். இது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்‌.

'சொப்பன சுந்தரி' என்றதும் அனைவருக்கும் 'கரகாட்டக்காரன்' பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த 'சொப்பன சுந்தரி'யை பட வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக்கொள்வார்கள்.

அண்மைக்காலமாக 'தரமற்ற படத்தை பார்த்தாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதனால், அனைவரும் திரையரங்கத்திற்கு செல்ல வேண்டும்.

விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும் அனைத்து திரைப்படங்களையும் திரையரங்கத்திற்குச் சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்துசெல்வது சினிமா அல்ல.

தெரியாமல் சென்று இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வது தான், சினிமா. எனவே, அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, 'க /பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, 'சொப்பன சுந்தரி' படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம்.

இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். பிறகு இருவரும் கதைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக, சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால், அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள், எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்துவிட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால், இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இது முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: மயக்கும் குரல் கொண்ட மெல்லிசை பாடகர் பி.ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.