ETV Bharat / entertainment

Swarnalatha: ஸ்வரத்தின் அரசி ஸ்வர்ணலதா நினைவு நாள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 5:01 AM IST

Updated : Sep 12, 2023, 9:20 AM IST

Swarnalatha Death Anniversary: பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு நாளில் தனது காந்த குரலால் இறவாப் புகழ் பெற்ற ஸ்வர்ணலதாவின் நினைவுகளை திரும்பிப் பார்ப்போம்...

ஸ்வர்ணலதா(கோப்புப்படம்)
ஸ்வர்ணலதா(கோப்புப்படம்)

சென்னை: உலகின் அழகை இயற்கையோடு வர்ணிக்கலாம்.. குழந்தையின் அழகை சிரிப்போடு வர்ணிக்கலாம்.. ஸ்வரத்தின் அழகை யாரோடு வர்ணிப்பது..இவரை தவிற வேறு யாருக்கு அது அப்படி அம்சமாக பொருந்திவிடப்போகிறது. ஸ்வர்ணலதா... குரல்களுக்கு வடிவம் இருந்தால் இன்றுவரை அவர்தான் உலக அழகியாகவே இருந்திருப்பார்.

அப்படி ஒரு போதை தரும் குரலுக்கு சொந்தக்காரர் ஸ்வர்ணலதா, தனது 23 வருட திரைவாழ்கையில் இனி யாரும் திருத்தம் செய்ய முடியாத அளவுக்கு தனது ஆழமான ஆளுமையை தனது பாடல்கள் மூலம் பதிய செய்து விட்டார் ஸ்வர்ணலதா. அவர் இறந்து இன்றுடன் 13 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் 13 ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் இசை உலகில் அவர் பதித்த கால் தடத்தை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. என்ற பாடலில் அவரின் குரலுக்கு இணையான போதையை எங்கு தேடியும் காண முடியாது. குயில் பாட்டு ஓ.. வந்ததென்ன இளம் மானே... அதை கேட்டு ஓ.. செல்வதெங்கே மனம் தானே...பாடலை கேட்கும்போது.. ஆம் மனம் எங்கோ செல்லதான் செய்கிறது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா. இன்றைய தலைமுறை கலைஞர்கள், கவிஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.

விக்ரம் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பீமா படத்தில் 'ரங்கு ரங்கமா' பாடலை பாடி இருந்தார். அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதுதான் அவரின் கடைசிப் பாடல் என்று ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியவர் ஸ்வர்ணலதா.

கேரள மாநிலத்தில் பிறந்து கர்நாடக இசையை கற்று தேர்ந்த ஸ்வர்ணலதா தனது 3 வயது முதலே பாடல்களை பாடத்தொடங்கி இருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அவர் பாடிய முதல் பாடல் மகாகவியின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாடல்தான். அதனை தொடர்ந்து அவர் செய்த சாதனைகள் உலகம் அறிந்ததே. மண்ணை விட்டு போனாலும் மனங்களை விட்டு போகாமல் மனதோடு உறவாடும் ஸ்வர்ணலதாவின் பாடல்களும், அவரின் தேடல்களும் இசையும், ரசிகரும் உள்ளவரை உலகத்தில் வாழும்.

இதையும் படிங்க: "மறக்குமா நெஞ்சம்"- மறக்க முடியாதவாறு பதில் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!

Last Updated : Sep 12, 2023, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.