ETV Bharat / entertainment

'நாட்டு நாட்டு' ஆஸ்கர் விருது இந்திய இசைத்துறைக்கு கிடைத்த மகுடம் - மதன் கார்க்கி பெருமிதம்!

author img

By

Published : Mar 13, 2023, 11:34 AM IST

'ஆர்ஆர்ஆர்'(RRR) படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கிடைத்த சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது, "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் இது இந்திய இசைத்துறைக்கு கிடைத்த மகுடம்" என்றும் அப்பாடலுக்கு தமிழில் வரிகள் எழுதிய மதன் கார்க்கி புகழாரம் சூட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஆஸ்கர் விருது பெற்ற "நாட்டு நாட்டு" பாடலுக்கு தமிழில் பாடல் வரிகள் எழுதிய மதன் கார்கி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக உரையாடல்

சென்னை: 95வது அகாடமி விருதுகள் இன்று (மார்ச்.13) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்திய திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்'(RRR) படத்தின் 'நாட்டு நாட்டு' (Naatu Naatu) பாடலுக்கு 'சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது' வழங்கப்பட்டது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்திற்குக் கீரவாணி இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த பாடல் 'சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது' (Best Original Song Oscar Award) பெற்று சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

ஒரு இந்தியப்‌ படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறித்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியரும் நாட்டு நாட்டு பாடலுக்கு தமிழ் வரிகள் எழுதியவருமான மதன் கார்க்கி நமது ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, 'ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். அழகான பாடல்கள் கொடுத்துள்ளார்கள். இது வெறும்‌ பாடல் மட்டுமல்ல. இதனை சினிமா பாடலாக மட்டுமே பார்க்க முடியாது. இதில் காதல், தியாகம், புரட்சி இருக்கிறது; ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இப்பாடலில் உள்ளது. இது எல்லோருக்குமான வெற்றி ஆகும்.

இதையும் படிங்க: Naatu Naatu song: "நாட்டு நாட்டு" பாடலுக்கு ஆஸ்கர் விருது!

"இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பாடல் பற்றி நிறைய பேசியுள்ளேன். ஆஸ்கர் வரை செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கீரவாணி மிகவும் தனித்துவமானவர். அடுத்து சந்திரமுகி 2 படத்திற்கு இசை அமைத்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் படம் பண்ணுகிறார். இதற்காக இங்குள்ள இளம் இசை அமைப்பாளர்களின் பாடல்களை கேட்க வேண்டும் என்றார். எப்படி இருக்கிறது தற்பேதைய தலைமுறையினரின் இசை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்" என்றார்.

மேலும், "ராஜமௌலிக்கு நன்றி. அவருடன் ’நான் ஈ’ படத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். அவருடைய சிந்தனை ஒவ்வொரு படத்திலும் விரிவடைந்து வருகிறது. உணர்ச்சிகளை பிரமாண்டமாக சொல்பவர்' என்று புகழாரம் சூடினார். மேலும் பேசிய அவர், இந்திய கலைஞர்களுக்கு அங்கீகாரம் தாமதமாக கிடைக்கிறது என்ற கேள்விக்கு, 'ஆஸ்கர் மிகப் பெரிய போட்டி. இதைவிட நிறைய பாடல்களை மக்கள் விரும்பியுள்ளனர். இதனை எப்படி கொண்டு போய் சேர்க்கிறோம் என்பது இருக்கிறது.

இந்த விருது தாமதமாக கிடைத்தாலும் விருது கிடைக்கும் போது எல்லோருக்கும் நம்பிக்கை கிடைக்கும். கலைஞர்கள் தங்களது படைப்புகளை விருதுகளுக்கு எப்படி கொண்டுபோக வேண்டும் என்பது முக்கியமானது. ஆர்ஆர்ஆர் குழு இதனை சிறப்பாக செய்துள்ளனர். ஆஸ்கர் கிடைக்கும் என்று நாங்கள் எல்லோரும் நம்பினோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.