ETV Bharat / entertainment

கோடிகளில் வசூல் செய்யும் படங்கள் சமூகத்தை சீரழிக்கக் கூடியவை - தங்கர் பச்சான் சர்ச்சை பேச்சு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 8:46 PM IST

சென்னையில் நடந்த ’கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய இயக்குநர் தங்கர் பச்சான் அதிக வசூல் செய்யும் படங்கள் குறித்து விமர்சித்து பேசியது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருமேகங்கள் கலைகின்றன
கருமேகங்கள் கலைகின்றன

சென்னை: தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் தற்பொது 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம் மேனன், தங்கர் பச்சான், ஆர்.வி.உதயகுமார், அதிதி பாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ”கிழக்கே போகும் ரயில் படத்தின்‌போது கேட்ட குரல் இப்போது வரை அப்படியே இருக்கிறது. கலைஞனுக்கு வயதில்லை. இப்போதும் அவரால் படம் இயக்க முடியும். விரைவில் படம் இயக்குவார்" என கூறினார்.

மேலும் அவரது சாதனையை இந்திய சினிமாவில் எந்த இயக்குநராலும் பண்ண முடியவில்லை என்றும், அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர் என்றும், தங்கர் பச்சான் எனது தம்பி போன்றவர் என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்றும் கூறினார். குறிப்பாக இப்படம் ஒரு உணர்வுப்பூர்வமான படம் என்பதையும், தங்கர்‌ பச்சானுக்கு தான் செல்லுலாய்டு சிற்பி என்ற பட்டத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கௌதம் மேனன் பேசும் போது, "இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான். இவரது படங்கள் எப்படி இருக்கும் என்று தெரியும்.‌ பாரதிராஜாவின் மகனாக நடிக்க சொன்னார்கள். எப்படி இருக்கும் என்று நினைத்து நடித்தேன். என்னை அடிக்க பாரதிராஜா தயங்கினார். எனக்கு இப்படத்தில் நடிக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன்" என்று நன்றி தெரிவித்து தன் உரையை முடித்து கொண்டார்.

அவரை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, ஆடியோ வெளியீட்டு விழா என்பது ஒரு சடங்கு என்றும். தனக்கு இதில் உடன்பாடு கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும், "தங்கர் பச்சான் ஒரு சிறந்த எழுத்தாளர். இப்படத்தில் என்னை ரொம்ப மோல்ட் செய்தார். நான் பெண்களின் கண்களை மிகவும் ரசிப்பவன். அதற்கு பிறகு கௌதம் மேனன் கண்களை ரசித்தேன்.‌ அவரது கண்கள் பேசும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, இப்படத்தில் நடித்த அனைவரும் தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளதாகவும், இந்த படம் ஒரு பெரிய இலக்கியம் என்றும், இந்த படம் சினிமாவில் நாகரீகமாக எடுக்கப்பட்ட படம் என்றும் தெரிவித்தார். மேலும் யோகிபாபுவின் நடிப்பை பாராட்டிய பாரதிராஜா, "கருமேகங்கள் கலைகின்றன" குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், இதை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

இப்படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான், "எனக்கு எதிரில் ஒரு லட்சம் பேர் நிற்கின்றனர். நம்மை கொலை செய்யக் கூடிய ஆயுதங்கள் உடன் நிற்கின்றனர். நான் எதுவும் இல்லாமல் நிற்கின்றேன். ஒரு ஒவ்வொரு படத்தையும் துணிச்சலுடன் எடுக்க வேண்டியுள்ளது. அதனை எடுத்து முடிப்பதற்குள் ஏற்படும் பாடு இருக்கே, அதனை விவரிக்க முடியாது" என்று பேசினார்.

நல்ல திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும், தான் இயக்கிய "அழகி" படத்தை வாங்குவதற்கு யாரும் இல்லை என்றும். மக்கள் பார்த்து கொண்டாடிய பின்பே எல்லோரும் வருவதாக தெரிவித்தார். மேலும் நல்ல படங்களில் நடிக்க நடிகர்கள் முன் வர வேண்டும் என்றும். 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் படங்கள் எல்லாம் சமூகத்தை சீரழிக்கக் கூடியவை என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் "ஜிவி பிரகாஷ் குமார் மிகப் பெரிய ஆளுமை. யோகி பாபு இம்மண்ணின் சிறந்த கலைஞன். அவரை வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்" என கூறினார். மேலும் திரைப்படங்களில் வெட்டுக் குத்து என காட்டினால் வருங்கால குழந்தைகள் என்னவாக என்பதை சுட்டிகாட்டிய அவர். அமெரிக்காவில்லும் ஒரு நடிகரின் கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதாக கூறினார். மேலும், "பள்ளிக்கூடம்" படம் வந்தபோது யாரும் பார்க்கவில்லை, இப்போது எல்லாம் பாராட்டுகின்றனர் கோவம் வருமா வராதா எனக்கு" என்று ஆவேசத்துடன் பேசினார்.

இதையும் படிங்க: சென்னை உலக சினிமா விழா.. மூன்று நாள் விழாவில் 15 படங்கள் திரையிடத் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.