ETV Bharat / crime

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

author img

By

Published : Jun 26, 2021, 7:24 AM IST

வல்லநாடு அருகே நேற்று (ஜூன் 25) மகனை கொலை செய்துவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய் தற்கொலை
தாய் தற்கொலை

தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மூன்று வயது சிறுவனை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் விக்னேஷ் (40). இவரது மனைவி சண்முக லட்சுமி (36), இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகி கமலேஷ் என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. மேலும் விக்னேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவரம் சண்முகலட்சுமிக்கு நேற்று (ஜூன் 25) தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணவன் மனைவிக்குள் தகராறு முற்றியது. இதனால் மனம் உடைந்த சண்முக லட்சுமி தனது மகனுடன் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார்.

பின்னர் தனது மகனை கொலைசெய்து, ஒரு கயிற்றில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் அவரும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவியும், குழந்தையும் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் விமலா தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தூத்துக்குடி ஊரக காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு விசாரணை நடத்திவருகிறார். மேலும் சண்முக லட்சுமி திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி சார் ஆட்சியர் மேல் விசாரணை நடத்திவருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதனிடையே சண்முக லட்சுமியின் பெற்றோர் முறப்பநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அவரது கணவர் விக்னேஷ், மாமனார் லட்சுமணன், மாமியார் மல்லிகா, அவரது அண்ணன் சுரேஷ் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மனைவி தற்கொலை: கணவன் உள்பட மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.