ETV Bharat / crime

மதுபானம் விற்றவர்களை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்: 5 பேர் கைது

author img

By

Published : May 29, 2021, 7:37 PM IST

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர்களைப் பிடிக்க சென்ற போது இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது!
விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது!

சென்னை: சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து விசாரிக்கச் சென்ற இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களை தாக்கியவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்டம், ஓட்டேரி பிரிக்லின் சாலையில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதை அறிந்து சரவண பெருமாள் என்பவர், மது வாங்குவதற்காக சென்றுள்ளார்.

தொடர்ந்து, மதுபானத்திற்கு உண்டான 500 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் அவர் தந்த நிலையில், மதுபானம் தராமல் அந்நபர் இவரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து, விரக்தியில் வேறு ஒருவரிடம் 200 ரூபாய் கொடுத்து மதுபான பாட்டில் வாங்கி உள்ளார். பின்பு 500 ரூபாய் பறித்துச் சென்ற நபரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்கு அங்கிருந்த நபர்கள் சரவண பெருமாளை அடித்து விரட்டி உள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து சரவணபெருமாள், ஓட்டேரி ரோந்துப் பணியிலிருந்த பெண் உதவி ஆய்வாளரான ஷஜிபாவிடம் தெரிவித்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் ஷஜிபா, திட்டமிட்டு சரவணபெருமாளை மீண்டும் மதுபாட்டில் வாங்க அனுப்பி உள்ளார். அப்படியே அவரைப் பின்தொடர்ந்து சென்ற ஷஜிபா, மதுபாட்டிலை விற்க வந்த சேகர் (எ) மீசை சேகர் என்பவரை பிடித்து மதுபான பாட்டிலை பறிமுதல் செய்துள்ளார்.

இதனையடுத்து ஓட்டேரி எஸ்.எஸ் புரம் ஏ பிளாக்கில் உள்ள சேகரின் வீட்டிற்கு சோதனை செய்ய சென்றபோது உதவி ஷிபாவை வழி மறித்த காஞ்சனா, சசிகலா, பிரியங்கா, மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் இணைந்து அவரைத் தாக்கி, அவரது கார் சாவியையும் பிடுங்கியுள்ளனர். அவருடன் உதவிக்கு சென்ற மற்றொரு உதவி ஆய்வாளரான மணிவண்ணனையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு உதவி ஆய்வாளர்களும் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சரவண பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர்களைத் தாக்கிய அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடியதில் கற்பகம், நந்தினி, செல்வி, காஞ்சனா, மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்து வரும் சசிகலா, வினோத், மோனிஷா, சந்தோஷ், ரமேஷ், சரவண பெருமாள் ஆகியோரையும் காவலர்கள் தேடி வருகின்றனர். மதுபான விற்பனை செய்த நபர்களைப் பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'மாதவிடாய் காலத்திலும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்' - முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.