திருச்சி: கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தற்போது தொற்று குறைந்துள்ளதால் நேரடி பள்ளிக்கல்வி முறை அமலுக்கு வந்ததுடன், நடப்பாண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இந்தாண்டு மே மாதம் நடைபெறுகிறது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மே.5) காலை தொடங்கியது. இன்றைய தினம் தமிழ் தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 265 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 522 மாணவர்கள், 17 ஆயிரத்து 599 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 121 பேர் எழுதுகின்றனர். இதற்காக 126 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாதவகையில் பறக்கும் படையினர், 126 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 126 துறை அலுவலர்கள், 2,134 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது, "தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் சுமார் 33,121 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதே சமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க 126 தேர்வு மையங்களிலும் பறக்கும் படையினர் சென்று கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இப்பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
ஆத்தா! நான் பாஸாகிட்டேன் என்ற உற்சாக குரலில் மாணவர்கள் குதுகலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.
இதையும் படிங்க: நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் உறுதி