ETV Bharat / city

திருச்சியில் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

author img

By

Published : Jan 6, 2021, 3:23 PM IST

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, திருச்சி வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி: மத்திய அரசு சமீபத்தில் புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்தப் புதிய சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் இருப்பதாகக் கூறி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக தமிழ்நாட்டில் பல இடங்களில், விவசாயிகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், ஏராளமான விவசாயிகள் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கன்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள வானொலி நிலையத்தின் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வேளாண் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம்செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகள் - நீதிபதிகள் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.