ETV Bharat / city

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம் - கிண்டலடித்த டிடிவி தினகரன்

author img

By

Published : Jul 31, 2022, 12:57 PM IST

'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுக பொதுச்செயலாளராக ஆகலாம். ஏனெனில், அந்த அளவிற்கு கட்சிப் பதவி ஏலம் விடப்படுகிறது' என்று மதுரையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

மதுரை சிந்தாமணி புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை30) ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 'எப்படி இந்த மண்டபம் பெரிதாக உள்ளதோ.? அது போல் மதுரை நிர்வாகிகள் வீரமும் பெரிது, உள்ளமும் பெரிது. பணத்தை நம்பி இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி பின்னால் சென்றிருப்பார்கள்.

ஆனால், அப்படி செல்லவில்லை. தற்போது தலைமை பதவிக்கே ஏலம் போட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்கள். பணபலத்தை கொண்டு வாழ்நாள் முழுவதும் ஆட்சி ஆள நினைப்பவர்கள் மீது நாள்தோறும் வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆளுகிற போது மக்கள் வரிப்பணத்தை முறையாக செலவு செய்யாமல் தாங்கள் சுருட்டிக்கொண்டதால், இன்று வழக்கை எதிர்நோக்கி உள்ளார்கள். அதிமுக தற்போது கம்பெனியாக செயல்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால்கூட அதிமுக பொதுச் செயலாளராக ஆகிவிடலாம். அந்த அளவிற்கு கட்சிப்பதவி ஏலம் விடப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்குப்பின் இது அவருடைய கட்சியோ, ஆட்சியோ கிடையாது என்பதால் அவர்கள் செல்லும் போக்கு சரியில்லை என்பதாலேயே கண்டித்தேன்.

நான் மதுரையில் போட்டியிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், சசிகலா தான் என்னை ஆர்.கே.நகரில் நிற்க வைத்தார். அன்றே எடப்பாடி பழனிசாமிக்குப் பயம் வந்து விட்டது. கட்சியில் இருப்பவர்களிடம் யாரும் ஊழலில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லியும் யாரும் கேட்காததால் நான் விலகி விட்டேன்.

நம்பிக்கை துரோகிகள் தப்பிக்க முடியாது: அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் டன் கணக்கில் ஊழல் செய்துள்ளார்கள். பணத்தை கொடுத்து ஆட்சியைப்பிடிக்க நினைத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால், அது முடியாது. நம்பிக்கை துரோகிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. தேர்தலுக்கு பின் இந்தக்கட்சி காணாமல் போய்விடும் என்று கூறினார்கள். ஆனால், தேர்தல் தோல்வியால் எங்கள் தொண்டர்கள் யாரும் சோர்ந்து விடவில்லை. அமமுக வருகிற தேர்தலில் வெற்றிபெற்று ஜனநாயக ரீதியில் அதிமுகவை மீட்டெடுக்கும். தொண்டர்கள் கட்சி சின்னத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

டிடிவி தினகரன் விமர்சனம்

அமமுக கொடி இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவிற்கு உழைக்க வேண்டும். நாடாளுமன்றத்தேர்தலோடு சட்டப்பேரவைத்தேர்தலும் வரும் என்பது என்னுடைய வியூகம். ஆதலால் சரியான தொண்டர்களை பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். வருகின்ற ஆக.15இல் சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும்.

அதற்கான அறிவிப்பினை விரைவில் தெரிவிப்பேன். நான் யாருக்காகவும் பின் வாங்கவோ, சமரசம் செய்யவோ போவதில்லை. தொண்டர்களாகிய உங்களை நம்பித்தான் நான் கட்சி தொடங்கியுள்ளேன். நாம் போர்க்களத்தில் நிற்கிறோம். நாடாளுமன்ற, சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: 'எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது' - திமுக மீது ஈபிஎஸ் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.