ETV Bharat / city

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்ற வழக்கு:வழக்கு முக்கியமானது எனக்கூறி, அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Sep 9, 2022, 3:28 PM IST

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி எனப்பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் மொழியியல் நிபுணர்களின் கருத்துகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் அரசு பதிலளிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்ற வழக்கு:  அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்ற வழக்கு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

தாமிரபரணி என்பது வடமொழிச்சொல் அதற்கு மாற்றாக தூய தமிழ்ப்பெயரான பொருநை நதி என மாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி எனப்பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இந்த வழக்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டு, அரசுத்தரப்பில் மொழியியல் நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டு, வழக்கு குறித்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டண உத்தரவை மறு ஆய்வு செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.