ETV Bharat / city

'தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி'

author img

By

Published : Dec 4, 2021, 10:33 AM IST

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திரையரங்குகள், கல்வி நிலையங்கள், பெருவணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அனீஷ் சேகர்
செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அனீஷ் சேகர்

மதுரை: கரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அண்மையில் ஒமைக்ரான் தொடர்பாக ஆய்வுமேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தமிழ்நாட்டிலேயே மதுரைதான் மிகவும் பின்தங்கியுள்ளது என வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களின் வருகையை அதிகப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 3) செய்தியாளரிடம் பேசிய அவர், “பொதுமக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.

மதுரையிலுள்ள உணவகங்கள், விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், சிறு-குறு வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சந்தைகள், டாஸ்மாக் மதுபானக்கடைகள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதியில்லை.

தங்களின் பணியாளர்கள் மூலமாக அந்தந்த நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தற்போது ஒருவார கால அவகாசம் அளிக்கப்படும். இந்தக் காலகட்டங்களில் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவார்கள். நாளையும் (டிசம்பர் 4), டிசம்பர் 11ஆம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தக் காலகட்டத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதற்குப் பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லையெனில் அவர்கள் பொது இடங்களில் நடமாட தடைவிதிக்கப்படுவர்.

செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர் அனீஷ் சேகர்

தற்போது திரையரங்குகள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. அதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்குப் பொது இடங்களில் அனுமதி குறித்து மதுரை மாநகராட்சி அலுவலர்கள் தொடர் சோதனை மேற்கொள்வார்கள்.

தற்போது 95 விழுக்காடு முடித்துள்ளோம். எஞ்சியுள்ள நபர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறோம். தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் போதுமான அளவிற்கு உள்ளன” என்றார்.

இதையும் படிங்க: நீர் தேங்குகிறது என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.