ETV Bharat / city

முல்லைப் பெரியாறு; 5 மாவட்ட மக்களை திரட்டிப் போராட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

author img

By

Published : Aug 6, 2022, 7:08 PM IST

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை திமுக அரசு தொடர்ந்தால் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உதயகுமார்
உதயகுமார்

மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஆக.6) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் , 'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5ஆம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்தனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர், ரூல் கர்வ் மூலம் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் 3 மதகுகள் மூலம் திறந்துள்ளார்கள். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது.

நம்பிக்கையை சீர்க்குலைக்கும் திமுக அரசு: விவசாயிகளின் 2 ஆண்டு கால நம்பிக்கையை திமுக அரசு சீர்குலைத்துள்ளது. இதனால், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும். தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்

ஏற்கனவே, 2021ஆம் ஆண்டு அக்.28ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு கேரளா அரசின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதை கேரளா அமைச்சர் ரோசி அகஸ்டின், அணைக்குச் செல்லாமல் வல்லக்கடவு பகுதியில் தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.

அதிமுக ஆட்சியில் 142 அடியாக உயர்வு: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின், 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றார். அதன் பிறகு, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது, அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

கேரளாவிற்கு அடிபணியும் அரசு: கர்நாடக அரசு காவிரி பிரச்சனையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தூக்கி எறிந்து மக்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்தனர். ஆனால், இன்றைக்கு கேரளாவின் ரூல் கர்வ்வை நிறைவேற்ற 142 அடியாக உயரும்போது, விவசாயிகளின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளது தமிழக அரசு. கேரளா அரசின் நடுக்கத்திற்கு திமுக தலைமையிலான தமிழக அரசு அடிபணிந்துள்ளது என்றார்.

போராட்டம்: மேலும் அவர், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் முல்லைப் பெரியாறு அணையில் அவர்களின் உரிமையை திமுக அரசு காக்க தவறுமானால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்' என்றார்.

இதையும் படிங்க: ‘வெள்ள பாதிப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.