மதுரை: மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் 103 பயனாளிகளுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கு உரிய ஆணையை வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்கிகுளம் பகுதியில் இருக்கும் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்று, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணையை வழங்கினார்.
ஆறு மாதங்களில் சிறப்பான செயல்பாடு
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "ராஜாக்கூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழைகள் தேர்வு செய்யப்பட்டு சலுகை விலையில் வீடு வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வணிகவரித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பவர்களை நிர்வாகக் காரணத்திற்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
![tamilnadu Minister of Commerce Moorthy, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-04-ration-rice-minister-murthi-svript-7208110_24112021165657_2411f_1637753217_543.jpg)
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 10 ஆண்டுகளில் எந்தத் துறையிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆறு மாதங்களில் சிறப்பாகச் செய்துவருகிறோம்" என்றார்.
தற்போது, வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், "கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கொள்முதல்செய்த நெல் தரமற்றமுறையில் இருப்பதன் காரணமாகவே தற்போது வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.