ETV Bharat / city

டாஸ்மாக் ஊழியர்கள் பணிநேரத்தை குறைக்க கோரிக்கை

author img

By

Published : Aug 5, 2021, 10:59 PM IST

தமிழ்நாடு முழுவதுமுள்ள டாஸ்மாக் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனவும் இதனை வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள்
டாஸ்மாக் ஊழியர்கள்

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான 'டாஸ்மாக்' கீழ் சுமார் 5 ஆயிரத்து 700 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன.

இதில், 27 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணியாற்றி வந்தாலும், இதுவரை பணி நிரந்தரம் இல்லாத நிலையே நீடிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய இத்துறையின் ஊழியர்கள் பணி வரன்முறை, காலமுறை ஊதிய அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், இ.எஸ்.ஜ மருத்துவ உதவி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அதற்காக பல்வேறு அடையாளப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஜான் கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

8 மணிநேரம் வேலை

இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர்களாக்க வேண்டும். அதிக வருவாய் ஈட்டி தரும் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். தற்போது கரோனா தாக்கம் அதிகமாகியுள்ளதால், கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயக்க வேண்டும் என அரசு அறிவுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள எல்லா கடைகளிலும், இதே நடைமுறையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர் நலன் பாதுகாப்பு

இதனால் ஊழியர்களின் நலன் காக்கப்படும். 12 மணிநேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதால் ஏற்படும் உடல் சார்ந்த நோய்களிலிருந்து டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்க முடியும். இதுபோன்ற நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்" என்றார்.

இச்சூழலில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 8 மணிநேர வேலைக்கான ஆணை, வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.