ETV Bharat / city

மீனவர் நலன் பாதிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Aug 5, 2021, 6:11 AM IST

மீனவர் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

anitha radhakrishnan
anitha radhakrishnan

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வரவிருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங்கள் எவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மீனவர் நலன் காக்கும் மற்றும் விவசாயிகள் கால்நடை சார்ந்த நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும். வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற சம்பவம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணாமலை தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, மீனவர் படுகொலை நிகழாது என்று கூறி சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இது சம்பந்தமாக ஒன்றிய அரசிடமே நடவடிக்கை எடுக்க உரிமை வழங்கியிருக்கிறோம். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. இந்த இரண்டு மாதமும் கரோனா பேரிடர் மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் துறை சார்ந்த அனைத்து திட்டங்களும் அறிவிக்கப்படும். பாரதிய ஜனதா கட்சியினர் எப்போதுமே அவசரப்படுவார்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அவசரப்படக்கூடாது

மீனவர்கள் சுருக்குமடி பயன்படுத்துவது சம்பந்தமான புகார்கள் அரசிற்கு வந்திருக்கிறது. அந்தப் புகார்கள் சம்பந்தமாக முதலமைச்சர் துறை அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை அளித்திருக்கின்றனர், இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

மேலும் அவர், "மீனவர் நலன் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அத்திட்டங்களை தமிழ்நாடு அரசு எதிர்க்கும். வடசென்னையில் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் அந்த கடற்கரை பகுதியில் உருவாக்கக் கூடிய மீன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியிருபது குறித்து துறை ரீதியான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.