ETV Bharat / city

'அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநில முழுவதும் பரப்புரை செய்ய அனுமதி இல்லை' - ஆணையம்

author img

By

Published : Mar 22, 2021, 3:55 PM IST

சென்னை: அங்கீகரிக்கப்படாத பதிவுசெய்யப்பட்ட கட்சிகள், மாநில முழுவதும் பரப்புரை செய்ய அனுமதியளிக்க முடியாது எனவும், தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் எனவும் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் போல், பதிவுசெய்யப்பட்ட தங்கள் கட்சிக்கும் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என, மனுதாரர் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரமில்லாத கட்சிகள், தொகுதி வாரியாக, தேர்தல் அலுவலர்களுக்கு விண்ணப்பித்து, பரப்புரைசெய்ய அனுமதி பெறலாம் என மார்ச் 15ஆம் தேதி பதிலளித்துள்ளதாகத் தெரிவித்தார்.


தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தைப் பதிவுசெய்த நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் பதிலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மனுதாரர் கட்சி எடுக்கலாம் எனவும் கூறி, வழக்கை முடித்துவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.