ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை வெளியீடு

author img

By

Published : Dec 7, 2021, 4:18 PM IST

2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை வெளியிடு
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், ”குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து 75 நாள்களுக்குப் பின்னர் தேர்வு நடத்தப்படும். அதேபோல் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு 75 நாள் கழித்து தேர்வு நடத்தப்படும். இது தவிர 35க்கும் மேற்பட்ட தேர்வுகள் 2022ல் நடைபெற உள்ளது.

தேர்வின் விவரங்கள்
குரூப் 2, 2ஏ ஆகிய பணிகளில் 5831 காலி இடங்களும், குரூப் 4 பொறுத்தவரையில் 5255 காலி இடங்களும் உள்ளன. மேலும், தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்ட பின்னர் துறையிலிருந்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வந்தால் அந்த இடங்களும் அறிவிப்பின் போது சேர்த்து வெளியிடப்படும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு குரூப் 4 காலியிடங்கள் 2000-லிருந்து 3000 கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

தேர்விற்கான பாடத்திட்டங்கள்

இத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்திற்குள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும். டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி பல்வேறு புதிய முறைகளை கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக ஓஎம்ஆர் (OMR) மற்றும் தேர்வர்களின் சுயவிவரங்களை தனியாக குறிப்பிட்டு, அதை பாதுகாப்பாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஓஎம்ஆர் விடைத்தாளை எடுத்து திருத்த முடியாது. இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.

மதிப்பெண் கணக்கீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பொறுத்தவரையில் 40 மதிப்பெண்களுக்கு மேல் பெறப்பட்ட மதிப்பெண்கள் முழுவதும் பொதுப்பிரிவில் கணக்கிடப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி விரிவான விடை எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற முறைகளும் நடைமுறையில் இருக்கும் . தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், தேர்வு மாதிரி வினாத்தாள்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

பாதுகாப்பு நடைமுறைகள்
கடந்த முறை நடைபெற்ற முறைகேடுகளை சரி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் இருந்து விடைத்தாள்களைத் திருத்துவது வரை பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பணியாளர்கள் யாரும் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தற்போதைய டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு செல்லாது. இதற்கு முன்பு இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்பற்றத் தேவையில்லை என தெரிவித்துள்ளோம். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும்.

கணினி வழித் தேர்வுகள்

தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் இறுதி விடைகள் குறிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். ஓஎம்ஆர் விடைத்தாளில் இருந்து மாற்று ஏற்பாடாக கணினி வழித் தேர்வை நடத்துவது குறித்து திட்டமிட்டு, தற்போது அரசு பணிகளில் துறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கணினி வழித் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதே வழியைப் பின்பற்றலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் தமிழ்வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற தேர்வர்களின் குற்றச்சாட்டுகளை களைய தனி கவனம் செலுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:8 மாணவர்கள் மதமாற்றம்? - கிறிஸ்தவப் பள்ளி மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.