நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 15 -18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியின் வைசியாள் வீதியில் உள்ள சுசிலாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (ஜன.4) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுங்கள். தைரியமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறுவர்களை பார்த்தாவது திருந்துங்கள்.
மேலும் ஒரு கரோனா அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும் சில கட்டுப்பாடுகள் வரும். கூட்டங்கள் கூடும் இடத்தில் 50 விழுக்காடு மக்கள்தான் இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும். இனிமேல் இந்த வைரஸோடுதான் வாழ்ந்தாக வேண்டும்.
இந்த கரோனா காலத்தில் யோகா நிகழ்வு நடத்துவதால் பயன் தரும். பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அப்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் அவர் பங்கேற்கிறார்”என்றார்.
இதையும் படிங்க: 'ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம்... தமிழ்நாட்டில் கல்லா கட்டும் வேலை!'