ETV Bharat / city

23 மீனவர்கள் கைது விவகாரம்: தேவை நிரத்தர தீர்வு - மருத்துவர் ராமதாஸ்

author img

By

Published : Oct 14, 2021, 3:19 PM IST

இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (அக். 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் 75-க்கும் மேற்பட்ட படகுகளில் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர். அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கையின் அத்துமீறலும், அராஜகமும்

தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கைப்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். சிங்கள கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

நாகப்பட்டினம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பே வெகு சில கிலோ மீட்டர்கள்தான். சர்வதேச கடல் எல்லையைக் கூட வரையறுக்க முடியாத அளவுக்கு அப்பகுதியில் கடற்பரப்பு குறுகியதாக உள்ளது. அதனால், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைவதும் இயல்பானதுதான்.

அத்தகைய சூழல்களையே கைது இல்லாமல் மென்மையாக கையாள வேண்டும் என்று பன்னாட்டு அமைப்புகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்திருப்பதை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் கடமை

கரோனா பரவல் காலத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான அத்துமீறல்களை இலங்கைக் கடற்படை சற்று கைவிட்டிருந்தது. இப்போது மீண்டும் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டன. 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அடுத்த சில வாரங்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்து விடும்.

மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை மீட்பது சாத்தியமல்ல என்பதால், அந்தப் படகுகளை நம்பியிருக்கும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்கும் கடமை ஒன்றிய அரசுக்கு உண்டு.

எனவே, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்யும் வகையில் இந்த சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக வங்கக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளைக் கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் மூன்று படகுகளை மீட்டு வருவதற்கும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நாகையில் 23 மீனவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.