ETV Bharat / city

போக்சோ: திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்த நபரைக் காப்பாற்ற பொய்சாட்சி கூறிய பெண் கைது

author img

By

Published : May 6, 2022, 10:34 PM IST

முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்ட கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண்ணை போக்சோ வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண்
கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண்

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இவரது கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றுவிட்ட நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அபிராமி வெளியூர் சென்று விடவே ஜார்ஜ் பெர்னாண்டஸ் அபிராமியின் முன்னாள் கணவரின் மகளான 13 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தபோது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அபிராமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது அளித்தப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். அவரது மகன் அபிராமியின் தாய் வீட்டில் வளர்ந்து வருகிறார். இதனையடுத்து மூன்று மாத காலம் சிறையில் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெளியே வந்தவுடன் மீண்டும் அபிராமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக போக்சோ வழக்கின் விசாரணையானது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கள்ளக்காதலனை காப்பாற்ற பொய்சாட்சி

கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அபிராமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது தவறுதலாக பொய் புகார் அளித்து விட்டதாகவும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் தினமும் குடித்து விட்டு தன்னை சித்திரவதை செய்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு பொய்ப் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அமுதா நேரடியாக காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தியதில் ஜான் பெர்னாண்டஸ் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் எனவும், தற்போது ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் அபிராமி பொய் சாட்சி கூறியதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் நீதிமன்றத்தில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி, அபிராமியை போக்சோ வழக்கில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், அதை மறைக்க முயற்சி செய்ததாகவும் அபிராமி மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் கொடூரம்... பாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற இரு பேத்திகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.