ETV Bharat / city

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு; மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Apr 17, 2022, 2:02 PM IST

Updated : Apr 17, 2022, 2:34 PM IST

மத்திய அரசின் உயர் பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது.

இட ஒதுக்கீடு: 2006ஆம் ஆண்டு நாகராஜ் வழக்கிலும், 2018ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் வழக்கிலும் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உயர் பதவிகளில் பட்டியலின, பழங்குடியினர் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதை அளவிடக்கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தால் மட்டும்தான் அவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று ஆணையிட்டது.

பட்டிலின, பழங்குடியின வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 11 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அதே நேரத்தில் பற்றாக்குறை பிரதிநிதித்துவத்தின் அளவை அரசுகளே தீர்மானிக்கலாம் என்றும் ஆணையிட்டிருந்தது.

அதனடிப்படையில், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டி தரும்படி அனைத்துத் துறைகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போது காலம் மாறியிருக்கிறது: அதற்கான ஆணையை மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை கடந்த வாரம் பிறப்பித்திருக்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு பதவி உயர்வில் வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை அவசியமாகும். இப்பணிகளை மத்திய அரசு விரைந்து முடித்து பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும்.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எழுப்பிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

புள்ளிவிவரங்கள்: அப்போதெல்லாம் அதற்காக கூறப்பட்ட காரணம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கினால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்பதுதான். ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. அரசுத் துறைகளின் உயர் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் நீட்டிக்கச் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயர் பதவிகளில் மட்டுமின்றி, சாதாரண பணிகளில் கூட இன்றுவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு உறுதியான, திடமான புள்ளிவிவரங்கள் உள்ளன.

ஓபிசி இட ஒதுக்கீடு: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கில், கடந்த மார்ச் 30ஆம் தேதி மத்திய அரசு தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில், மத்திய அரசின் 75 துறைகளில் மொத்தமுள்ள 27 லட்சத்து,55ஆயிரத்து,430 பணியாளர்களில் பட்டியலினத்தவர் 4 லட்சத்து,79 ஆயிரத்து,301 (17.30%), பழங்குடியினர் 2 லட்சத்து,14 ஆயிரத்து,738 (7.7%) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 4 லட்சத்து,57 ஆயிரத்து,148 (16.50%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து, 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அனைத்து நிலை பணிகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டதற்கும், குறைவாக 16.50 விழுக்காடு என்ற அளவில்தான் இருக்கிறது எனும்போது, உயர் பதவிகளில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதை விட வலிமையான காரணம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சில பணிகளுக்கான பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுவந்த பதவி உயர்வை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துவிட்டன. இதற்காக 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளையும் செல்லாது என்று அறிவித்துவிட்டன.

மத்திய அரசு முன்வர வேண்டும்: இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும்தான் ஒரே வழியாகும். பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை காக்க 1995ஆம் ஆண்டிலும், 2012ஆம் ஆண்டிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருமுறை திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதேபோல், மத்திய அரசின் உயர் பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'விவேக் எனும் வித்தக கலைஞன்!'

Last Updated :Apr 17, 2022, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.