ETV Bharat / city

'மக்கள் இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்' - ராமதாஸ்

author img

By

Published : Jun 13, 2020, 3:36 PM IST

சென்னை: மக்கள் இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

pople togetherness only destroyed coronavirus said pmk leader ramadoss
pople togetherness only destroyed coronavirus said pmk leader ramadoss

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் நோய் பரவிவரும் வேகம் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அனைவர் மனதிலும் பதற்றம் பரவுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே சென்னைவாசிகள் உள்ளனர்.

சென்னையில் கரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே அடுத்த சில நாள்களில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், சென்னையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6,000 பேருக்கு மட்டுமே கரோனா சோதனைகள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கையை அடுத்த சில நாள்களில் 10,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது; வெளியில் வந்தால் முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும், மீண்டும் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அதைப் பெரும்பான்மையான மக்கள் பொருட்படுத்தாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிகளவில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது வாடிக்கையாகி விட்டது. முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாததால், அபராதத்தை ரூ.1,000ஆக உயர்த்தினால் கூட தவறில்லை.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை. மக்கள் இயக்கமாக மாறினால்தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து சென்னை மாநகர மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் வந்தால் முகக்கவசம் அணிவதையும், வெளியில் சென்று வந்த பிறகு கைகளைச் சுத்தமாக கழுவுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.