ETV Bharat / city

'தமிழ்நாடு நாள்' அறிவிப்பு மரபு மீறிய செயல் - ஓபிஎஸ்

author img

By

Published : Oct 31, 2021, 6:03 PM IST

ஜூலை 18ஆம் தேதியை 'தமிழ்நாடு நாள்' என கொண்டாடப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு மரபு மீறிய செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops, stalin, ஓபிஎஸ், ஸ்டாலின்
ops

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக். 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதியை 'தமிழ்நாடு நாள்' ஆக கொண்டாடப்படும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது.

பொருத்தமற்ற அறிவிப்பு

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம்தான் தற்போதைய தமிழ்நாடு. எனவேதான், அப்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் 1ஆம் தேதி தோன்றியதன் அடிப்படையில், அந்த நாளில், 'தமிழ்நாடு நாள்' ஆக அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அதிமுக அரசு அறிவித்தது.

இதனை, எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜூலை 18ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி, 1967 ஜூலை 18ஆம் தேதி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 'தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட நாள்தான் பொருத்தமாக இருக்கும்' என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்து, அதன் அடிப்படையில், ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இது பொருத்தமற்ற ஒன்றாகும்.

ஜூலை 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டாலும், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1968ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதிதான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது.

குழந்தை பிறந்த தினமே பிறந்தநாள்!

முதலமைச்சரின் வாதத்தின்படி பார்த்தாலும் ஜனவரி 14ஆம் நாளைத் தான் 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட வேண்டும். ஒரு குழந்தை என்றைக்கு பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்படுமே தவிர , ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு அலுவலகமோ , கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருத முடியாது. எனவே , 'ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள்' என்ற முதலமைச்சரின் அறிவிப்பு அவர்களின் வாதத்தின்படியே நியாயமற்றதாக இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. பத்து வருடங்கள் கழித்து அந்தக் குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அந்தக் குழந்தையின் பிறந்தநாள் என்பது அந்தக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில் தான் கொண்டாடப்படுமே தவிர, பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்படமாட்டாது.

முடிவை மாற்றவும்

இதேபோன்று, தற்போதைய நிலப்பரப்புடன் 1956ஆம் ஆண்டு பிறந்த சென்னை மாகாணம் என்ற குழந்தைக்கு 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்து அதன் அடிப்படையில் 1969ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டாலும், அதன் பிறந்த நாள் நவம்பர் 1ஆம் தேதிதான் (1969). எனவே ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது.

இந்தச் செயல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன் பிறந்த மாநிலத்தை, பின் பிறந்ததாக கூறுவதற்குச் சமம். இது வரலாற்றை திரித்து எழுதும் முயற்சி. 1956ஆம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967ஆம் ஆண்டு பிறந்ததாக சித்தரிப்பது மரபு மீறிய செயல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.

எனவே, சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1ஆம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாக கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 18ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பினை திரும்பப் பெற்றவேண்டும். மேலும், நவம்பர் 1ஆம் தேதியே 'தமிழ்நாடு நாள்' என்று தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: நவம்பர் 1ஆம் தேதியே 'தமிழ்நாடு நாள்' - போர்க்கொடி தூக்கும் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.