ETV Bharat / city

’வேளாண் மசோதாக்களால் உழவர் சந்தைகள் அழிக்கப்படும்’

author img

By

Published : Sep 21, 2020, 7:08 PM IST

சென்னை: மத்திய அரசின் மசோதாக்களால், மாநிலத்தின் வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவை முற்றிலும் அழிக்கப்படும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

meet
meet

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,

” மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல், குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் சர்வாதிகாரமாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்கள், வேளாண் விளை பொருட்களை வரம்பின்றி பதுக்க வழி செய்கிறது. இவற்றின் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும், வேளாண் முன்னேற்றத்திற்குப் பின்னடைவை தரக்கூடியதும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு புறம்பானதுமான இம்மூன்று சட்டத் திருத்தங்களும், கடும் கண்டனத்திற்குறியது. மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி இவற்றை நிறைவேற்றியிருக்கும் மத்திய பாஜக அரசுக்கும், அவற்றை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கும், வன்மையான கண்டனத்தை இக்கூட்டம் தெரிவித்து கொள்கிறது.

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டத்தின் மூலம், 5 ஆண்டுகள் வரைகூட கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளுடன் பண்ணை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்; அதை நீட்டித்துக் கொள்ளலாம்; எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் போன்ற பிரிவுகள் அனைத்தும், குறு, சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் மின்னணு வர்த்தகத்தை அனுமதித்து, மின்னணு வர்த்தக மேடை அமைப்பது, விவசாயிகளுக்கு நிரந்தர கணக்கு எண் கட்டாயம் என்பவை, வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவற்றை அறவே ஒழிக்கும் நடைமுறைகள் ஆகும். இவை மாநிலத்திற்குள் நடக்கும் வர்த்தகம், வணிகம் போன்ற அதிகாரங்களையும் மத்திய அரசே கைப்பற்றி கொள்ளும் மேலாதிக்கப் போக்காகும்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து, பி.எம்.கிஸான் திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள், விவசாயத்தை மறைமுகமாக வருமான வரி வரம்பிற்குள் இழுக்கும் திட்டமிட்ட முயற்சிதான் இது. மேலும், ஏற்கனவே பீகாரில் தோற்று விட்ட இந்த மாதிரியை திணித்து, சூழ்ச்சி வளைக்குள் ஏழை விவசாயிகளை சிக்க வைத்து, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சியாகும்.

எனவே, இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும், வரும் 28 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் “ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.