சென்னை பட்டாபிராம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்தியாலு (56). இவர் அந்தப் பகுதியிலுள்ள சீதாபதி சேம்பர் நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தியாலுவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரை திடீரென வழிமறித்துள்ளார்.
பின்னர் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி வந்து, கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 2000 பணத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து முத்தியாலு, பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பட்டாபிராம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் கருணாநிதி (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் போலி தந்தங்கள் பறிமுதல்: காவல் துறை விசாரணை!