ETV Bharat / city

சாதிச்சான்றிதழ் கேட்டு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் - உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

author img

By

Published : Oct 13, 2022, 12:56 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார். தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததும் தெரியவந்தது. தீக்குளித்த வேல்முருகனுக்கு 95 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (அக்.13) அதிகாலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு ஆஜரான வழக்கறிஞர் சூர்யாபிரகாசம், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இது குறித்து தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளரை அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், தலைமை நீதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மலைக்குறவர் சமூகத்தைச்சேர்ந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.