ETV Bharat / city

கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு! - வாக்காளர் வழக்கு!

author img

By

Published : Dec 17, 2020, 5:05 PM IST

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கரூர் தொகுதி வாக்காளர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கரூர் தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ” கரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதோடு, ஆவண அடையாளங்கள் இல்லாத பலரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளால் தேர்தல் நேர்மையாக நடக்குமா? என அய்யம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொடர்புடையவர்களுக்கு கடந்த நவம்பர் 7 ஆம் தேதியே புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கரூர் சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் “ எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடுத்த வழக்கும், வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளை திட்டமிட்டபடி திமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் - டிகேஎஸ் இளங்கோவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.