ETV Bharat / city

'மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது தான் மிகவும் முக்கியம்' - இறையன்பு

author img

By

Published : Jul 27, 2022, 4:22 PM IST

ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாணவர்களின் கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

இறையன்பு
இறையன்பு

சென்னை: அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 'பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு' திட்டத்தின் தொடக்க விழாவில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று (ஜூலை 27) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'எத்தனையோ பணிகள் இருந்தாலும் 2 பணிகள் தான் முக்கியமானதாக காலம் தொடர்ந்து பார்த்துக் கொள்கிறது. மருத்துவப்பணி பிணம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆசிரியர் பணி நடைப்பிணம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. மாணவர்கள் மனநலம், உடல் நலத்தைப் பேணுவதற்காக ஆலோசனை வழங்கும் நிகழச்சி அமைக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், உடல் நலமும் பாதிக்கப்படும் என மருத்துவம் தெளிவாக சொல்கிறது.

தற்கொலைகள் தற்போது பெருகி வருகிறது. தற்கொலைகள் 1950-ல் இருந்து நடந்து வருகிறது. அதில் பெண்கள் இரண்டு மடங்காகவும், ஆண் குழந்தைகள் 3 மடங்காக அதிகரித்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது தான் மிகவும் முக்கியம்.

தன்னம்பிக்கை இல்லை என்றால் கல்வியும் இல்லை என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் மாணவர்கள் அறிந்து கற்க வேண்டும். உத்வேகத்துடன் போராடினால் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை என்பது எதைப் பெறுகிறோம் என்பதில்லை; எதில் உண்மையாக இருக்கிறோம், உயர்வாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.

ஆசிரியர்கள் மாணவர்களை உற்று கவனிக்கவேண்டும்; எந்த மாணவன் மனதளவில் விலகி விலகி செல்கிறானோ, சரியாக சாப்பிட முடியாமல், பாடத்தில் கவனம் கொள்ளாதவனை, மன அழுத்தத்தில் இருக்கிறான் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

பல வீடுகளில் மாணவர்களிடம் பெற்றோர் பேசுவதே இல்லை, அப்படியே பேசினாலும் என்ன மதிப்பெண் என்று மட்டும் தான் கேட்கின்றனர். மதிப்பெண்களுக்கு கொடுக்கிற அவசியம் மாணவர்களுக்கு கொடுப்பது இல்லை. மாணவர்கள் தங்களின் கருத்துகளை பகிரும் சந்தர்பத்தை ஆசிரியர்கள், பெற்றோர் ஏற்படுத்தி தர வேண்டும். ஒரு தற்கொலை, பல தற்கொலைக்கு தூண்டுகிறது , ஊடகங்கலும் சற்று ஆராய்ந்து அதை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் செல்லும் இடங்களை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும் - தலைமைச்செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.