ETV Bharat / city

முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பேருந்து சேவை!

author img

By

Published : Dec 11, 2021, 12:24 PM IST

சென்னையில் முதல் முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேக அரசுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதை மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என பிரத்தியேக அரசுப்பேருந்து ஏற்பாடு
முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என பிரத்தியேக அரசுப்பேருந்து ஏற்பாடு

சென்னை: சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் பின்பகுதியில் பரந்துவிரிந்த இடத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. ஒரு காலத்தில் ஐந்தாயிரம் மாணவர்கள் படித்த நிலையில், படிப்படியாக மாணவர் எண்ணிக்கை சரிந்து தற்போது வெறும் 200 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

குடிபெயர்வால் தூரமான பள்ளிக் கல்வி

அதிலும் 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழைக்குப் பிறகு, கோட்டூர்புரம், கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

மேலும், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நந்தனம் அரசுப் பள்ளியில் படித்த நிலையில், கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு மாறியதால் அங்கிருந்து நாள்தோறும் நந்தனம் வந்துசெல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

மாணவர்கள் வருகை

இதனால் பல மாணவர்கள் நந்தனம் அரசுப்பள்ளிக்கு வருவதைக் கைவிட்டு, வேறு பள்ளியில் சேர்ந்தனர். இதன் காரணமாகவும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்தது. மாணவர்களுக்கென பிரத்யேக பேருந்து வசதி ஏற்பாடு செய்தால், மாணவர்களுக்கு உதவியாக இருப்பதுடன், பள்ளி மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாணவர்களுக்கென பிரத்யேகமாக அரசுப் பேருந்தை இயக்குவதற்கு, மயிலை சட்டப்பேரவை உறுப்பினர் வேலுவிடம் பேசினார். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் நடவடிக்கை காரணமாக, ஆழ்வார்பேட்டை முதல் பெரும்பாக்கம் வரை, மாணவர்களுக்கென பிரத்யேக அரசுப் பேருந்து ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 10) மாலை நந்தனத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்தது. இதில் எம்எல்ஏ வேலு, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காகப் பேருந்து

மாணவர்கள் உற்சாக கூக்குரலிட்டு மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணித்தனர்
மாணவர்கள் உற்சாக கூக்குரலிட்டு மகிழ்ச்சி

வேலு கொடியசைத்து மாணவர்களுக்கான போக்குவரத்தை தொடங்கிவைத்தார். கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாக கூக்குரலிட்டு மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணித்தனர்.

"மாணவர்கள் வசதிக்காக இந்தப் பேருந்து வசதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக நந்தனம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்" என்று வேலு தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, சென்னையில் முதல் முறையாக அரசுப் பள்ளிக்கென்று, பிரத்யேகப் பேருந்து வசதி ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதையும் படிங்க: காவல் சரகங்களையும் அமைக்க சிறப்பு அலுவலர்கள் மூலம் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.