ETV Bharat / city

மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

author img

By

Published : Aug 26, 2021, 6:11 PM IST

மிரட்டல் விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

சென்னை: நடிகை மீரா மிதுன் தனது யூ-ட்யூப் பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது பட்டியலினத்தோர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுனை சென்னை எம்கேபி நகர் காவல் துறையினர், மற்றொரு வழக்கில் நேற்று (ஆக.26) கைது செய்தனர்.

2020ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டதற்கான ஆணையுடன் புழல் சிறையிலிருந்து நடிகை மீரா மிதுனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்துவதற்கு இரண்டு நாள் காவல் கேட்டு எம்கேபி நகர் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டும் மீரா மிதுன் மனுதாக்கல் செய்துள்ளார்.

காவல் துறையினரின் மனு தள்ளுபடி

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி லட்சுமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்கேபி நகர் காவல் துறையினர் தரப்பில், மீரா மிதுனுக்கு பிணை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியும் கோரினர்.

இந்நிலையில், மீரா மிதுன் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையினரின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பட்டியலின மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவலில் இருப்பதால் மீண்டும் புழல் சிறைக்கு காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதய ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், தன்னையும் தன் குடும்பத்தினரையும் நடிகை மீரா மிதுன் தாக்க முயல்வதாக கொடுக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் எழும்பூர் 14ஆவது செவ்வியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னையை பொருத்தவரையில் மீரா மிதுன் மீது, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சென்னை மத்திய இப்பிரிவில் ஒரு வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு வழக்குகளில் மீரா மிதுன் மீது காவல் துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.