சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எவனும் புத்தனில்லை' திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், 'இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் சினிமா தான். ஆனால் சினிமா இன்று பல பிரச்னையை சந்திக்கிறது. இதற்கு காரணம் குடும்பமாக இருந்த சினிமா தற்போது வியாபாரமாக மாறிவிட்டது. இன்னும் நம்மிடத்தில் தீரன் சின்னமலை, மருதநாயகம் உள்ளிட்ட பல கதைகள் உள்ளன. ஆனால் இதை படமாக தயாரிக்க சிஸ்டம் சரியில்லை. சிஸ்டத்தை சரிசெய்ய வருபவர்களும் திருடர்களாக இருக்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்றுவதற்கு முன் நம்மை காப்பாற்றிய சினிமாவை காப்பாற்றுங்கள்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'திரையரங்குகளில் பாப்கான், காபி போன்றவற்றை விற்பதில் நமக்கும் ஒரு பங்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய படத்தை பார்க்க வரும்போது தானே ரசிகர்கள் பாப்கார்ன் போன்றவற்றையும் வாங்குகிறார்கள். அந்த காலத்தில் ஹாலிவுட் படம் எடுத்த இயக்குநர்களுக்கு இன்றளவும் ராயல்டி பணம் செல்கிறது.
இன்றளவும் சிங்கார வேலன், சின்னகவுண்டர் படங்கள் வாரம் தோறும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அவ்வாறு ஒளிபரப்பும் போது ராயல்டி கிடைத்தால் நன்றாக இருக்கும். அதை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுகூடி பேச முன்வர வேண்டும். மிகப் பிரபலமான நடிகர்கள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து சம்பளத்தை வரைமுறைப்படுத்தினால் திரையுலகத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்' என்று தெரிவித்தார்.