ETV Bharat / city

பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; திருமணம் அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Mar 21, 2022, 4:24 PM IST

திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தரச் சொத்து பெண்களுக்கு வேண்டுமென்பதால் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி அனைவரும் இத்திட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.21) தெரிவித்தார்.

பெண்களுக்கு கல்வி தான் முக்கியம் திருமணம் அல்ல
பெண்களுக்கு கல்வி தான் முக்கியம் திருமணம் அல்ல

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின் மீது பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர், திருமண உதவித்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், '1989ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு முதல்தடவையாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டது.

இடையில் இத்திட்டத்தை நிறுத்திய அதிமுக அரசு, பின்னர் மீண்டும் செயல்படுத்தியது. அப்போது அதிமுக அரசு திருமண உதவியை 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி அறிவித்தது. நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் 24.5 விழுக்காடு மட்டுமே தகுதியான பயனாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

CAG தணிக்கை அறிக்கையின் மூலம் இத்திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. முறைகேடு செய்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நாற்பத்து மூன்று வழக்குகள் பதிவு செய்து, அந்த நாற்பத்து மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தாலிக்குத் தங்கம் திட்டம்

தமிழ்நாட்டில் உயர் நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 விழுக்காடு மட்டுமே இருப்பதால், அதைச் சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்குத் தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம். திருமண உதவித்திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். ஆனால், உயர் கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தரச் சொத்து உரிமை பெண்களுக்கு வேண்டும்.

பெண்ணுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் கட்சி பாகுபாடின்றி இத்திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்' என முதலமைச்சர் தெரிவித்தார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, 'ஏற்கெனவே விண்ணப்பித்துக் காத்திருக்கக்கூடியவர்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு, இத்திட்டத்தை தொடர வேண்டும்' என்றார். மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.