ETV Bharat / city

கலைஞர் விருது ஏன் வழங்கப்படவில்லை? - முதலமைச்சர் பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Dec 16, 2020, 3:03 PM IST

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பிலான கலைஞர் விருதுகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் முதலமைச்சர் பழனிசாமி, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ” மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004 ஆம் ஆண்டு, தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டதோடு, தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் தொடங்கப்பட்டது.

அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கி, அதன் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை உருவாக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது கடந்த 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த விருதுகள், வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக அனைத்து விருதுகளையும் வழங்க உத்தரவிட வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செம்மொழித் தமிழாய்வு இயக்குநர், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் உள்ளிட்டோருக்கு, இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் சிறை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.