ETV Bharat / city

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்

author img

By

Published : Mar 15, 2021, 2:06 PM IST

மதுரை: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

highcourt madurai bench
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

நெல்லையைச் சேர்ந்த மனோகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்ட மசோதாவை பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில், நிறைவேற்றியது. இதற்கு தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் (எம்பிசி) மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

68 சமூகத்தைக் கொண்ட சீர் மரபினர்களுக்கு 7 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2.5விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து மதுரையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு மாவீரன் வன்னியர் சங்கம் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.