சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முதல் நிகழ்வாக சிலம்பாட்டக் கலைஞர்கள் பங்கேற்ற தொடர் இசை முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் இடையிடையே இசை நிகழ்ச்சிகளும் குடியுரிமைச் சட்டம் குறித்த கருத்தாளர்களின் மேடைப் பேச்சுகளும் அரங்கேறின.
போராட்டத்தில் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி,
”குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைத் திசை திருப்ப, எங்காவது வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதை ஒரு இசுலாமியர் மீது பழிபோட முயற்சிகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த முற்பட்டால், ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவோம்“ என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,
”இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும், இசுலாமியர்களையும் இந்துக்களையும் பிரிக்க வேண்டும், அரசியல் சாசனத்தை மாற்றி மனுதர்மத்தை அமல்படுத்த வேண்டும் என பாஜக திட்டமிடுகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயான போராட்டம் அல்ல; ஒட்டுமொத்த தேசத்தையும் மீட்டெடுக்கும் போராட்டம் என்பதை கருத்தில்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து போராடி நாட்டை காக்க பாடுபட வேண்டும்“ என்றார்.
இதில், திரைக்கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், படைப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல் போட மறுத்ததால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிறையில் 2 பெண் கைதிகள் உண்ணாவிரதம்!