ETV Bharat / city

மயிலாப்பூர் மயில் சிலை மாயம்: 6 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

author img

By

Published : Jan 31, 2022, 9:23 PM IST

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து மயில் சிலை காணாமல்போனது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை ஆறு வார காலத்திற்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் மயில் சிலை மாயம்
மயிலாப்பூர் மயில் சிலை மாயம்

சென்னை: மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றபோது புன்னைவனநாதர் சன்னதியிலிருந்த மயில் சிலை காணாமல்போனது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 2018ஆம் ஆண்டு பதிவுசெய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும்,

அறநிலையத் துறை அலுவலர்களின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

உண்மை கண்டறியும் குழு விசாரணை

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உண்மை கண்டறியும் குழுவின் நிலவரம் என்ன என்பது குறித்து ஆஜராகி விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 31) மீண்டும் பொறுப்புத் தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை நிலை என்ன எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்திவந்ததால் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை நிறுத்திவைத்திருந்ததாகத் தெரிவித்தார்.

6 வாரத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

கோயிலிலிருந்து சிலை காணாமல்போனால் அந்தச் சிலையைக் கண்டுபிடித்து வைக்க வேண்டுமென்றும், அப்படி இல்லையென்றால் அது போன்றதொரு சிலையைத்தான் வைக்க வேண்டுமெனவும் ஆகம விதி இருப்பதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் கூறினார்.

இதனையடுத்து, காணாமல்போன மயில் சிலையைப் போல ஒரு சிலையை அங்கு வைப்பது தொடர்பாக தொல்லியல் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கைத் தாக்கல்செய்யவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தங்களது விசாரணையை ஆறு வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வரமான நீட்: வறுமையிலும் வென்று மருத்துவராகும் அரசுப்பள்ளி மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.