ETV Bharat / city

கைத்தறி - துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு

author img

By

Published : Sep 6, 2021, 4:43 PM IST

கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கையில் 25 புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டார்.

ஆர். காந்தி
ஆர். காந்தி

சென்னை: சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

அதன்படி, இன்று நடைபெற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த துறையின் அமைச்சர் ஆர். காந்தி 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:

  • கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தள்ளுபடி மானியத்திற்கு கூடுதலாக 160.11 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தி நகர்ப்புற நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  • ஆறு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம், கைத்திறனைப் பாதுகாக்கும் வகையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் உற்பத்தி - வியாபாரத் திறனை மேம்படுத்த நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர் சலவை இயந்திரம் நிறுவப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூறுகள் 10 விழுக்காடு உயர்வும், அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்வும் வழங்கப்படும்.
  • 3.67 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்திச் செய்யப்படும் கைத்தறி - பெடல் தறி வேட்டி சேலை ரகங்களுக்கு தற்போது வழங்கப்படும் நெசவுக்கு முந்தைய பணிக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும்.
  • இலவச சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி - பெடல் தறி கேஸ்மென்ட் துணி ரகங்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும்.
  • நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஆயிரத்து 33 நிரந்தரப் பணியாளர்களின் ஊதிய விகிதத்தைச் சீரமைக்க ஊதிய நிர்ணயக் குழு அமைத்து சம்பள உயர்வு வழங்கப்படும்.
  • நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் 406 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களைக் கண்கவர் வடிவங்களை உருவாக்கி நெசவுசெய்யப்படும் ஜகார்டு இயந்திரங்கள் பராமரிப்பு சேவை மையம் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்.
  • மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
  • மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பட்டு - பருத்தி ரகங்களைப் புதுமையான வடிவமைப்புகளை உருவாக்கும் சிறந்த நெசவாளர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ஒரு லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருவதை முறையே முதல் பரிசு 5 லட்சமும், இரண்டாம் பரிசு மூன்று லட்சமும், மூன்றாம் பரிசு இரண்டு லட்சமுமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள விற்பனை நிலைய விற்பனையாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதற்கு 35 லட்சம் ரூபாய் செலவில் விற்பனைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
  • தமிழ்நாடெங்கும் 66 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தரப் பணியாளர்களுக்குப் புதிய ஊதிய விகிதம் மாற்றி அமைத்து வழங்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு - காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு மின் வணிகத்திற்கான கணினிப் பயிற்சி வழங்கப்படும்.
  • சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
  • இயற்கை முறையில் பெறப்பட்ட பருத்தி நூலிழைகள் மூலம் தயார்செய்யப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • இல்லந்தோறும் கோ-ஆப்டெக்ஸ் என்ற இலக்கினை அடைய ரூபாய் 50 லட்சம் செலவில் புதிய வடிவமைப்புகளில் ரகங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்யப்படும்.
  • 300 கைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
  • தூய ஜரிகை பட்டுச் சேலைகளில் உள்ள ஜரிகையின் தரம் உறுதிப்படுத்துவதற்காக ஜரிகை உத்திரவாத அட்டை முதன்முறையாக கோ-ஆப்டெக்ஸில் வாடிக்கையாளர்கள் தங்கள் ரசனைக்கேற்ற சேலை வடிவமைப்புகளைத் தாங்களே வடிவமைத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்யப்படும்.
  • கைத்தறி - துணிநூல் துறை ஆணையர் அகத்தில் நெசவாளர் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.