ETV Bharat / business

இந்தியாவில் கூகுள் நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்று தெரியுமா?

author img

By

Published : Jul 13, 2020, 5:19 PM IST

டெல்லி: அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம்

பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, டிஜிட்டல்மயமாக்கலுக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறது. இதன் ஒரு அங்கமாக, 'கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்வு நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஆறாவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கூகுள் ஃபார் இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதியை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சியின் மூலம், அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். ஒண்றினைந்து சரியான அளவில் முதலீடு செய்வதன் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.

இந்திய டிஜிட்டல்மயமாக்கலுக்கான நான்கு முக்கியத் துறைகளில் முதலீடு செய்யப்படும். அனைவருக்கும் சொந்த மொழிகளில் தகவலைக் கொண்டுசேர்ப்பது. தனித்துவமான தேவைக்கேற்றார்போல் புதிய பொருள்கள், சேவைகளைக் கட்டமைப்பது. இணைய மயமாக்கலில் தொடர்ந்து பணியாற்ற வணிகத்தை மேம்படுத்துதல். பொதுநலன் கருதி சுகாதாரம், விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துதல். இதுவே அந்த நான்கு முக்கியத் துறைகள்" என்று பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் இன்று நடைபெறவுள்ள 'கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

இதையும் படிங்க: சுந்தர் பிச்சை - மோடி வீடியோ கான்பரன்ஸ் - காரணம் இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.