ETV Bharat / briefs

இலங்கைக்கு கடத்தவிருந்த போதைப் பொருள்கள் பறிமுதல்!

author img

By

Published : Jun 5, 2020, 6:21 PM IST

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தவிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள்கள் பறிமுதல்
2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இலங்கைக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தவிருப்பதாக மே 21ஆம் தேதி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருவாடானை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான காவல் துறையினர் திருவாடானை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின், ஆம்பெடமைன், ஓப்பியம் பேஸ்ட் உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்கள், 1.5 டன் செம்மரக்கடை ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்த அந்த போதை கடத்தலில் தொடர்புடைய மேலும் 1 பெண் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் நுண்பிரிவிற்கு மாற்றப்பட்டது.

இதன் வழக்கை தொடர்ந்து விசாரித்த காவல் துறையினர், அதில் கிடைத்த தடயங்களை வைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமைத்த தனிப்படை காவல் துறையினர் மேலும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்தித்த காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், " திருவாடானை அருகே பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தலில் கிடைத்த தடயங்களை வைத்து உதவி ஆய்வாளர்கள் தங்க முனியசாமி, ஜேசுதாஸ் ஆகியோர் இன்று ஆம்பெடமைன் , கொக்கைன், மேட் ஆம்பெடமைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களையும், சிங்கப் பல், மான் கொம்பு ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

இதன் மதிப்பை ஆய்வு செய்த பின்னரே சொல்ல முடியும். ஆனால், கைது செய்யப்பட்டவர்களிடம் கேட்டபோது இது 2 கோடி ரூபாய் வரையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறினர். மேலும், இவை அனைத்தும் தொண்டியிலிருந்து படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.