ETV Bharat / state

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை

author img

By

Published : Jul 27, 2021, 11:55 AM IST

Updated : Jul 27, 2021, 1:19 PM IST

சொகுசு கார் வழக்கு - நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை
சொகுசு கார் வழக்கு - நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை

11:46 July 27

சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. 

இதையடுத்து, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர. ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். 

மேலும், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், இன்று (ஜூலை. 27) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில், " நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். விஜயை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும். 

விஜய்யை விட அதிகமான விலைக்கு கார் வாங்கியவர்கள் கூட நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு நடிகர் விஜய் மீது மட்டும் தனி நீதிபதி விமர்சனங்கள் வைத்தது சரியான அணுமுமுறை அல்ல, வழக்கு தொடர்ந்த போது நுழைவு வரி வசூலிக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுகள் அமலில் இருந்ததால் வழக்கு தொடர்ந்தோம். நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. 

வரி விதிப்பை எதிர்க்கவில்லை. வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் தனி நீதிபதி தன்னை தேச விரோதியாக தீர்ப்பில் முத்திரை குத்தியுள்ளார். இந்த கருத்துகளை நீக்க வேண்டும். 

கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித்திறையினர் எவ்வளவு செலுத்த வேண்டும் என சொல்கிறார்களோ? அதை 7 அல்லது 10 நாட்களுக்குள் செலுத்துகிறேன் என விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விமர்சனம், அபராதம் குறித்து நாங்கள் தெரிவிக்க ஏதும் இல்லை. நுழைவு வரியை கணக்கிட்டு கூறுகிறோம். 2012 கானக்கீட்டின் படி 20 விழுக்காடு ஏற்கனவே செலுத்தியுள்ளது போக மீதி தொகையை  செலுத்தினால் போதும்" என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். வணிக வரித்துறை வரித் தொகையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு சொல்ல வேண்டும். அதில் மீதமுள்ள 80 விழுக்காடு பணத்தை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும். 

விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

இதையும் படிங்க: 16 பொறியியல் கல்லூரிகளை மூட விண்ணப்பம்

Last Updated : Jul 27, 2021, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.